வாயில் பிளாஸ்திரி ஒட்டி மருத்துவ மாணவர்கள் நூதன போராட்டம்..!!
வாயில் பிளாஸ்திரி ஒட்டி, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மவுன விரதப் போராட்டம் நடத்தினர். மருத்துவக் கல்லூரி படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் கோரிக்கை குறித்து பிரதமர் மற்றும் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். அதன்பின், உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். ஆனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி, அரசு பொது மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவ, மாணவிகள் மவுன விரதப் போராட்டம் மேற்கொண்டனர். அவர்கள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி, மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து, மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, முதல்வரின் கோரிக்கையை ஏற்று எங்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எங்கள் கோரிக்கைகளை எதுவும் நிறைவேற்றாமல், மவுனம் காக்கும் மத்திய அமைச்சர் அன்பு
மணியை எதிர்த்து மவுன விரதப் போராட்டம் நடத்துகிறோம் என்றனர். மூன்று கல்லூரிகளிலும் பிற்பகல் 1 மணி வரை போராட்டம் நடந்தது. அதன்பிறகு மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.