ஓரின சேர்க்கை தம்பதிக்கு வாடகை தாய்மூலம் இரட்டை குழந்தை
மும்பையை சேர்ந்த மகப்பேறு மருத்துவ டாக்டர் கவுதம் அலாகாபதியா. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பதற்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார். இத்தாலியை சேர்ந்த ஆண் ஓரின சேர்க்கை தம்பதி ஒன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார்கள். அவர்கள் டாக்டர் கவுதமை அணுகினார்கள். அவர்களுக்கு உதவ கவுதம் முன் வந்தார். அந்த ஆண்களில் ஒருவரின் விந்தணு எடுக்கப்பட்டது. கரு முட்டை தானம் செய்யும் ஒரு பெண்ணிடம் இருந்து இரு முட்டைகளை எடுத்தனர். இதை வைத்து சோதனை குழாய் மூலம் 2 கருக்களை உருவாக்கினர். பின்னர் வாடகை தாய் ஒருவரை ஏற்பாடு செய்து அவருடைய கருப்பையில் 2 கரு முட்டைகளும் வைக்கப்பட்டன. கரு வளர்ந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2 குழந்தைகளும் ஓரின சேர்க்கை தம்பதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை எடுத்து கொண்டு இத்தாலிக்கு புறப்பட்டு சென்றனர்.