மெல்ல மெல்ல இயல்புக்கு வரும் சென்னை…!!
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்பொழுது வெள்ள நீர் வழியத் தொடங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பிக்கொண்டிருக்கிறது.
பேருந்து போக்குவரத்தும் தொடங்கி உள்ளன. கடந்த 2 தினங்களாக மழை விட்டுள்ளதால் சென்னையில் தேங்கிய வெள்ளம் கொஞ்சம், கொஞ்சமாக வடியத் தொடங்கியுள்ளது. வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் உட்பகுதி சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்து விட்டது.
தற்போது ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை குறைந்து உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படிப்படியாக தண்ணீர் வடிய ஆரம்பித்தது. அடையாறு ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம் ஓரளவு குறைந்தது. இதனால் சைதாப்பேட்டை பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் இப்போது குறைந்து பாலத்துக்கு கீழேதான் தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக அந்த பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது.
அடையார், கூவம் கரையோர பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்த வெள்ளம் வடிந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அடையாறு, கூவம் நதிக்கரைகளில் வெள்ளம் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று பல பகுதிகளில் வழக்கமான மாநகர பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன. 3 நாட்களாக ஓடாமல் இருந்த பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
புறநகர் மற்றும் வெளியூர் பஸ்களும் புறப்பட்டுச் சென்றன. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுவதால், ரயில் சேவைகள் இல்லாமல் திண்டாடிய அம்மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் தங்களது ஊர்களுக்கு செல்லத்தொடங்கினர்.
Average Rating