ஓசூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை ஏன்?: உருக்கமான தகவல்கள்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உளியாபுரத்தை சேர்ந்தவர் சந்திராரெட்டி (வயது 60). ஓய்வு பெற்ற தபால் அதிகாரியான இவருக்கு சொந்தமான நிலம் ஓசூர் ஆவலப்பள்ளி அருகே உள்ளது. அந்த நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
அந்த கோழிப் பண்ணையில் உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் கிராமத்தை சேர்ந்த முன்னா (வயது 30) மற்றும் அவரது தாயார், 2 சகோதரர்கள், 1 சகோதரி என மொத்தம் 5 பேர் தங்கி வேலைபார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு நேற்று மாலை உள்புறமாக பூட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை.
பின்னர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு முன்னா உள்பட 4 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களின் அருகில் 13 வயது சிறுமி மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அந்த சிறுமியை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகலறிந்த ஓசூர் அட்கோ போலீஸ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், முன்னா மற்றும் அவரது தாய், சகோதரர்கள் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் பெயர் சந்தா (13) என்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக சொந்த ஊருக்கு திரும்பி செல்ல திட்டமிட்டிருந்தாகவும், இதுகுறித்து அவர்கள் கோழிப் பண்ணை உரிமையாளரிடம் தெரிவித்து வந்ததாகவும், கோழிப்பண்ணை உரிமையாளர் அவர்களை பணம் கொடுத்து அனுப்பி வைக்காமல் காலதாமதம் செய்து வந்ததாகவும், இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவர்கள் மன வேதனையில் இருந்ததாகவும், அதனால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோழிப் பண்ணை உரிமையாளர் சம்பவ இடத்திற்கு இதுவரை வராமல் இருப்பதால் மேலும் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோழிப்பண்ணை உரிமையாளர் யார்? அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஆவலப்பள்ளி பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating