மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்திற்கு…*சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர்குண்டு வெடித்தது. இதில் 184 பேர் உயிரிழந்தனர்.714 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. சட்டத்தை மீறி ஆயுதங்கள் வைத்திருந்ததற்க்காக ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மும்பை தடா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
மும்பை தடாநீதிமன்றம் தீர்ப்பு நகல் வழங்காததால் அவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் அவருக்கு தீர்ப்பு நகல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சஞ்சய் தத் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் எரவாடா சிறையில் அக்டோர் 22ம் தேதி அடைக்கப்பட்டார். இதையடுத்து சஞ்சய் தத் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.சஞ்சய் தத் சார்பில் ஆஜரான வக்கீல் தண்டனை காலத்தில் நான்கில் ஒரு பகுதியை சஞ்சய் தத் சிறையில் அனுபவித்துவிட்டதால் அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
இதையடுத்து சஞ்சய் தத்துக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் சஞ்சய் தத் தனது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டபட்டுள்ளது. இதேபோல சஞ்சய் தத்தின் நண்பர் யூசுப் நுல்வாலாவுக்கும் உள்ளிட்ட 25 பேரில் 17 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மற்றவர்களின் ஜாமீன் மனுவை பரீசிலிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சோமநாத் தோப்பா என்ற கஸ்டம்ஸ் அதிகாரி புற்றுநோயால் அவதிப்படுவதால் அவருக்கு ஜாமீன் வழஙகியது.
ஜாமீன் பெற்ற அனைவரும் மாதம் ஒரு முறை சி.பி.ஐ.,யின் சிறப்பு படை முன்பு ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.சஞ்சய் தத்தின் ஜாமீன் மீதான தீர்ப்பு விவரம் கிடைக்கப்பெற்றவுடன் அவர் விடுவிக்கப்படுவார் என்று எரவாடா சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.