மலேசியாவில்: மூன்று தமிழர்கள் அவர்கள் பேசிய தமிழின் மொழியாக்கம் புரியாததால் விடுதலை
மலேசியாவில் அரசை எதிர்த்து போராட்டத்தை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட இந்து இனத் தலைவர்கள் மூன்று பேர், அவர்கள் பேசிய தமிழின் மொழியாக்கம் புரியாததால் தற்காலிகமாக விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இந்துக்களை, அப்போதைய மலேசியாவுக்கு கொண்டு வந்ததாகவும், இந்தியாவின் சுதந்திரத்தின் போது அவர்களை திருப்பி அனுப்பி வைக்காததால், தொடர்ந்து மலேசியாவிலேயே வசித்து வரும் இந்துக்கள் அடக்குமுறைக்கு ஆளாவதாகவும் கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.1.6 லட்சம் மலேசிய இந்துக்களுக்கு நஷ்ட ஈடு தருவதற்கு தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்கள் தரப்புக்கு பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத் தனது வக்கீலை நியமிக்க வேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம் நடந்தது. இந்திய இந்துக்கள் கையெழுத்திட்ட மனுவை அளிக்க, கோலாலம்பூரில் 10 ஆயிரம் இந்துக்கள் திரண்டபோது வன்முறை ஏற்பட்டது. தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். மலேசிய அரசு தரப்பில் இந்துக்கள் மீது எந்த அடக்கு முறையும் இல்லை, அனைத்துப் பிரிவினரும் சமத்துவமாகத் தான் நடத்தப்படுகின்றனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், கல்வி வேலை வாய்ப்புகளில், மலேசியாவில் இருக்கும் 8 சதவீதம் தங்களுக்கு சமத்துவம் அளிக்கப்படவில்லை என்று இந்துக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையில் பேசியதாக இந்து தலைவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மலேசிய சட்டப்படி இது போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இந்து உரிமை அமைப்பு தலைவர்கள், போராட்டத்தின் போது தமிழில் பேசியதால், அதை மலேயா மொழியில் மொழி பெயர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அரசு சாரா அமைப்பான இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் நிறுவனர்கள் உதயகுமார், அவரது சகோதரர் பி.வாய்தா மூர்த்தி, கணபதி ராவ் ஆகியோரை தற்காலிகமாக விடுவிக்க கோலாலம்பூர் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஜுனைத் இட்ரிஸ் உத்தரவிட்டார்.
விடுவிக்கப்பட்ட உதயகுமார், “போராட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் எதிர்பாராதது. ஆனால், இதில் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கலந்து கொண்டதை பார்க்கும் போதே, நாங்கள் எந்த அளவுக்கு அடக்குமுறையை சந்தித்து வருகிறோம் என்பது தெளிவாக தெரிந்திருக்கும். எங்கள் உரிமையை பெறும் வரை போராட்டம் தொடரும்’ என்று கூறினார். மேலும், பொய்யான குற்றச்சாட்டின் கீழ் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் உதயகுமார் கூறியுள்ளார்.