பரமக்குடி அரசுப்பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி: 2 ஆசிரியைகள் மீது வழக்கு..!!
பரமக்குடி அரசுப்பள்ளி பிளஸ்–2 மாணவிகள் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 2 ஆசிரியைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவனேஸ்வரி (வயது18), பிரீத்தா (17), கவுரி (18), கோகிலா (17) ஆகியோர் பிளஸ்–2 படித்து வருகிறார்கள்.
இதில் புவனேஸ்வரியும், பிரீத்தாவும் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். அவர்களை வகுப்பு ஆசிரியைகள் கலைச்செல்வி, பத்மபிரியா ஆகியோர் கண்டித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு சரியாக வராத, தேர்வு சரியாக எழுதாத மற்ற மாணவிகளையும் ஆசிரியைகள் கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்த 4 மாணவிகளும் பள்ளி இடைவேளையின்போது விஷ மருந்தை சாப்பிட்டுள்ளனர்.
இதை பார்த்த ஆசிரியைகள், 4 மாணவிகளையும் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 பேரும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஆசிரியைகளை பயமுறுத்துவதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார்கள்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, மாவட்ட கல்வி அதிகாரி ரெங்கநாதன் போலீஸ் டி.எஸ்.பி. கணபதி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக ஆசிரியைகள் கலைச்செல்வி, பத்மபிரியா ஆகியோர் மீது பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Average Rating