புரசைவாக்கத்தில் பழமையான 2 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது…!!
சென்னை புரசைவாக்கம் சுந்தரம் தெருவில் 80 ஆண்டுகள் பழமையான 2 மாடி கட்டிடம் இருந்தது. இங்கு யாரும் குடியிருக்கவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக அந்த கட்டிடம் பராமரிப்பின்றி இருந்து வந்தது.
தற்போது பெய்த கனமழையினால் அந்த கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் மாவட்ட அலுவலர்(பொறுப்பு) ராஜேஷ்கண்ணன் தலைமையில் கீழ்ப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, எசுபிளனேடு ஆகிய இடங்களில் இருந்து 4 வண்டிகளில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்றனர். அவர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர் ஒருவர் கூறியதாவது:-
இந்த கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம். தற்போது பெய்த மழையின் காரணமாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம்.வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதன் அருகில் சேதமடைந்த நிலையில் மற்றொரு கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடமும் இடிந்து விழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating