இலங்கைப் பணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை மீள்பரிசீலனை…!!
இலங்கைப் பணிப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனை மறு பரிசீலனை செய்யப்படுவதாக, செய்திகள் வௌியாகியுள்ளன.
குறித்த தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
45 வயதுடை குறித்த பெண் மூன்று குழந்தைகளின் தாயாவார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து சவுதியில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இவருக்கு பிரிதொரு ஆணுடன் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்தக் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்ட நிலையில், கல்லால் அடித்துக் கொல்லுமாறு சவுதி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதோடு, இதனுடன் தொடர்புடைய ஆணுக்கு 100 கசையடிகளை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் குறித்த பெண்ணின் கணவர் இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தை தொடர்பு கொண்டார். இதனைடுத்து இலங்கை அரசாங்கம் குறித்த தண்டனையை மறு பரிசீலனை செய்யுமாறு சவுதி அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் உபுல் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் இருப்பினும் வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் இது குறித்து மேன்முறையீடு செய்துள்ளதாகவும், வௌிவிவகார அமைச்சின் சார்பில் இராஜதந்திர மட்டத்தில் சவுதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating