திருநாவலூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி..!!
திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு சென்னை புறப்பட்டு வந்தது. பஸ்சை திண்டுக்கல் ஒசவாப்பட்டியை சேர்ந்த டிரைவர் பெஞ்சமின் பிராங்க்ளின் (வயது 40) ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக வேடசந்தூரை சேர்ந்த ராஜேந்திரன் (55) இருந்து வந்தார்.
பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே மடப்பட்டு மேம்பாலத்தில் வந்த போது அங்கு பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக பஸ் மோதியது. இதில், பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சிவகாசி வெற்றிலை ஊரணி பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (60), பெரிய குளத்தை சேர்ந்த ஜெயமங்கலத்தின் மனைவி ஜிஜி (29) மற்றும் பஸ்சின் மாற்று டிரைவர் ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள்.
மேலும் பஸ் பயணிகள் ராமசாமி (66), ஈஸ்வரன் (28), பழனியாண்டவர் (24), புஷ்பராஜ் (22) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜராஜன், திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெகடர் ஷாகுல் அமீது, சப்–இன்ஸ்பெக்டர் அப்பாசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
Average Rating