ராமேஸ்வரத்தில் “விடுதலை புலி’ இலங்கை தப்ப முயன்ற போது கைது!!
இலங்கைக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற போது ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார். பரமக்குடி அருகே வேனை போலீசார் சோதனை செய்த போது அதில் விடுதலைப் புலிகளுக்கு கடத்த இருந்த வெடி மூலப்பொருட்கள் 50 மூட்டைகளில் இருந்தது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான டென்னிசனை தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் டவுன் பகுதியில் இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த சதீஸ்வரன்(31) பிடிபட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற்ற இவர் அடிக்கடி தமிழகம் வந்து ஏஜன்ட்கள் மூலம் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை கடத்தி சென்றவர் என்பது தெரியவந்துள்ளது. இவரிடம் இருந்த கெமிக்கல் தொடர்பான புத்தகத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். விசாரணையில் அவர் 10 நாட்களுக்கு முன் அகதியாக ராமேஸ்வரம் வந்து இங்கிருந்து சென்னைக்கு சென்றதாக கூறியுள்ளார். இலங்கையில் தமிழ்ச்செல்வன், நகுலன் என இரண்டு பெயர்கள் உள்ளதாக கூறும் இவர் சில நேரங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையும் கூறி வருகிறார்.