தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வர்த்தகரின் சடலம்; இளைஞர்கள் கொல்லப்பட்ட இடத்தில் தலை மீட்பு…!!
எல்பிட்டிய ஊறுகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் இஹலமாலவலரந்தொடுவல பிரதேசத்தை சேர்ந்த சரத்குமார என்ற 39 வயதான மணல் வர்த்தகர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபருக்கு சொந்தமான வர்த்த நிலையத்துக்கு அருகிலிருந்து அவரின் தலையற்ற முண்டப்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரின் தலை சனிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்திருந்த விரோதம் ஒன்றே இக்கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் தலைப்பகுதி கிடைக்கப் பெற்ற இடத்திலேயே கடந்த மாதம் 3ஆம் திகதி துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவர் உயிரிழந்திருந்தனர்.
மேலும் நவம்பர் 3 ஆம் திகதி காலை 9.15 மணியளவில் ஊறுகஸ்மங்ஹந்திய – ரன்தொடுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்கள் ஊறுகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன் விரோதம் ஒன்றின் விளைவாலேயே மேற்படி இளைஞர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என சம்பவம் இடம்பெற்ற வேளையில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் அவர்களது வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் மோட்டார் சைக்கிளிள் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொல்லப்பட்டனர்.
மேற்படி துப்பாக்கிச் சூடு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவம் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா? என கண்டறியும் பொருட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating