அரசு பஸ் மோதி கால்வாயில் கார் கவிழ்ந்தது:3 பேர் பலி
கன்னியாகுமரி அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதியதில் கார் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் தாய், மகன் உட்பட 3 பேர் பலியாயினர். குமரி அருகே கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சன்னிபிரைட் டேவிட் (40). இவர், தனது காரில் தாய் தெய்வபாக்கியம் (65), பெரியம்மா மேரி (70) ஆகியோருடன் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். மந்தாரம்புதூர் அருகே கார் வந்தபோது பேச்சிப்பாறையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த அரசு பஸ்சில் ஆக்சில் உடைந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய பஸ், எதிரே வந்த டேவிட் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் அருகில் உள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டு தண்ணீரில் மூழ்கியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கால்வாய்க்குள் நீந்தி சென்று காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் மூச்சு திணறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது பற்றி தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.