பு.புளியம்பட்டி அருகே கடைக்குள் கார் புகுந்தது: கணவன்–மனைவி படுகாயம்…!!
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 50). இவரது மனைவி ரங்கம்மாள் (45).
விண்ணப்பள்ளியில் இவர்கள் வீட்டோடு மளிகை கடை மற்றும் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு கடையை வழக்கம் போல் சாத்தி விட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் 1 மணியளவில் கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கோவை சரவணம்பட்டியை சேர்ந்த அமித் (30) என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த கார் திடீரென நிலைதடுமாறி குமாரசாமி கடைக்குள் பாய்ந்து புகுந்தது.
இந்த விபத்தில் வீட்டில் படுத்து தூங்கிய குமாரசாமியும், அவரது மனைவி ரங்கம்மாவும் படுகாயம் அடைந்தனர்.
உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயத்துடன் துடித்த கணவன்–மனைவி இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் ஓட்டி வந்த அமித்தும் மேலும் காரில் வந்தவர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பு.புளியம்பட்டி அருகே நள்ளிரவில் கடைக்குள் கார் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating