ரூ.40 லட்சத்தில் சென்னை சில்க்ஸ் அறிமுகம் உலகின் விலை உயர்ந்த சேலை
சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த பட்டுப் புடவையை உருவாக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விநாயகம், மாணிக்கம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சில்க்ஸ் நிறுவனம், பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உட்பட 12 ஆபரணக்கற்களை இணைத்து உலகின் விலை உயர்ந்த பட்டுப் புடவையை உருவாக்கியுள்ளது. இதில் பெண் இசைக் கலைஞர்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு கலாசாரப் பின்னணியைச் சேர்ந்த இசைக்கலைஞர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. சேலையின் இருபுறங்களிலும் 10 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 4680 மணி நேர உழைப்பில் தயாரான இந்த பட்டுப்புடவைதான் அணிகலன்களை இணைத்து கைத்தறியில் இரட்டை வார்ப்பு முறையில் நெய்த உலகின் முதல் பட்டுச்சேலையாகும். புகழ்பெற்ற ஓவியமேதை ராஜா ரவிவர்மாவின் 11 ஓவியங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. உலகின் விலை உயர்ந்த சேலை, 12 விதமான உலோகங்கள், கற்களால் தயாரிக்கப்பட்டது மற்றும் ரவிவர்மா ஓவியங்கள் இடம்பெற்றது ஆகிய 3 அம்சங்களுக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை என்பதற்கான கின்னஸ் சாதனையில் இடம்பெறவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.40 லட்சம். ரத்தினக்கற்கள் இல்லாமல் ஓவியங்கள் மட்டும் இடம்பெற்றுள்ள சேலை ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கும் என்றார் அவர்.