25 ஆயிரம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குகிறது எஸ்.டி.பி.ஐ.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க எஸ்.டி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக தொடர்ந்து உணவும், நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டு தகுதியான சுமார் 25 ஆயிரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தேவையான அடிப்படை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் மழை நீர் தேங்கி நின்ற பல்வேறு பகுதிகளில் ஏராளமான கழிவுகளும், குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இதன் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், அவற்றை அப்புறப்படுத்தும் பொருட்டு, ‘சென்னையை சுத்தமாக்குவோம்’ என்ற பெயரில் மாபெரும் சுகாதார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுத்துள்ளது. இதன்படி, குப்பையை அகற்றுதல், கிருமி நாசினி தெளித்தல், நோய் தடுப்பு மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேப்போன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் பொது மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று (டிச.08) வேளச்சேரி, சைதாப்பேட்டை, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், செங்கல்பட்டு ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதன்மூலம் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
எஸ்.டிபி.ஐ கட்சி சார்பாக சென்னையில் இன்று (டிச.08) சுமார் 2000 ஆயிரம் பேருக்கு உணவும், சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. சென்னை புளியந்தோப்பு மற்றும் தாம்பரம் அருகே உள்ள நடுவீரப்பட்டி ஆகிய இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதேப்போன்று கடலூரில் 1200 பேருக்கு உணவும், ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Average Rating