அரச -தனியார் பஸ் சண்டை-யாழில் சம்பவம்..!!
பலாலி வீதி, பரமேஸ்வராச் சந்தியில் புதன்கிழமை(09) தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஆகியவற்றின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கிடையே ஏற்பட்ட தகராரில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
புன்னாலைக்கட்டுவனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், பரமேஸ்வரா சந்தியில் நின்ற பயணிகளை ஏற்றுவதற்கு நின்றுள்ளது.
இதன்போது, பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பஸ், போக்குவரத்துச் சபையின் பஸ்ஸை முந்திச் சென்று நிறுத்தியதுடன், அந்த பஸ்ஸை தொடர்ந்து நகரமுடியாமல் தடுத்தது. இதையடுத்து,போக்குவரத்துச் சபை பஸ், தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது, தனியார் பஸ் நடத்துநர், போக்குவரத்துச் சபை பஸ் நடத்துநரை தாக்கியுள்ளார்.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையில் சண்டை மூண்டது. இதன்போது,இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் நடத்துநரின் கையிலிருந்து பணம், பற்றுச்சீட்டு புத்தகம் என்பன தனியார் பஸ் நடத்துநரால் தூக்கி எறியப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நால்வரையும் கைது செய்ததுடன்,இரண்டு பஸ்களையும் பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.
Average Rating