ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 4 மாதங்களே ஆன இரட்டை குழந்தைகள் சாவு – பெற்றோர் கதறல்…!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அருகே உள்ள பாலசுந்தரபுரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 29), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துபிரியா.
இந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 மாதங்களுக்கு முன்பு அழகான இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. சில தினங்களாகவே அந்த பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் தம்பதியினர் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வந்தனர்.
நேற்று முதல் மழை சற்றே குறைந்த நிலையில் இரவு முதல் அதிகமான குளிர் அந்த பகுதியில் நிலவியது. இன்று காலை வழக்கம்போல் பழனிசாமி மனைவியிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த முத்துபிரியா இரட்டை குழந்தைகளை பாய் விரித்து அதில் படுக்க வைத்திருந்தார்.
மேலும் பனிமூட்டம் காரணமாக குளிர் அதிகம் இருந்ததால் குழந்தைகளின் மேல் போர்வையை போர்த்தியிருந்தார். தனது பணிகளை முடித்த பின்னர் சிறிது நேரம் கழித்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்காக எழுப்ப முயன்று போர்வையை விலக்கினார்.
அப்போது இரண்டு குழந்தைகளுடன் அசைவற்று கிடந்தன. இதனால் அதிர்ந்து போன முத்துபிரியா உடனே அருகில் இருந்தவர்களை அழைத்து வந்தார். அவர்கள் எழுப்ப முயன்றும் குழந்தைகளிடம் இருந்து எந்தவித உணர்வும் இல்லை. மேலும் இதுபற்றி முத்துபிரியா தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மழை காரணமாக தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை நாடி தனது குழந்தைகளை வந்து பார்க்குமாறு முத்துபிரியா கூறினார். அதன்பேரில் டாக்டர்கள் விரைந்து சென்று பார்த்த போது அந்த குழந்தைகள் இரண்டும் இறந்திருந்தது தெரியவந்தது.
உடனே குழந்தைகளை வாரி அணைத்த முத்துபிரியாவும், பழனிசாமியும் கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வீட்டு முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மழை காரணமாக நிலவிய கடும் குளிரால் குழந்தைகள் இறந்ததா? அல்லது போர்வை போர்த்தியதால் ஏற்பட்ட மூச்சு திணறலால் இறந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்து 4 மாதங்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating