மயிலாப்பூர் பகுதியில் 1 வாரமாக குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் அவதி…!!
சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஆனால் ஒரு சில பகுதிகள் மட்டும் வெள்ளத்தில் இருந்து தப்பியது. பாதிக்காத பகுதிகளில் மயிலாப்பூரும் ஒன்று.
அனைத்து ஏரிகளும் நிரம்பியதையடுத்து சென்னை நகர மக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்குமே தங்கு தடையின்றி சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சீராக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மயிலாப்பூர் பகுதி முழுவதிலும் கடந்த 1 வார காலமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இங்குள்ள பலா தோப்பு, விசாலாட்சி தோட்டம், பிள்ளையார் தோட்டம், கபாலி தோட்டம், நைனார் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த 4–ந்தேதி முதல் குடிநீர் வரவில்லை.
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்த பகுதி முழுவதும் குழாய்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக இப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘‘குடிநீர் விநியோகத்தில் பழுது காரணமாகவே விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இன்னும் சில தினங்களில் அது சரி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஊரெல்லாம் வெள்ளத்தில் மிதக்கும் நேரத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது போல மயிலாப்பூர் பகுதி மக்கள் தவிக்கிறார்கள். இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு ஏற்பட வேண்டும் என்று அவர்களது கோரிக்கையாக உள்ளது.
Average Rating