பொள்ளாச்சி அருகே இளம்பெண் கொலை: கைதான டிரைவர் வாக்குமூலம்…!!
பொள்ளாச்சி அருகேயுள்ள ஆ.சங்கம் பாளையம் சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சாந்தி(வயது 22). இவரது கணவர் மணிகண்டன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் சாந்தி தனது அக்காள் பிரியாவுடன் சீனிவாசநகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சாந்தி கடந்த 7–ந் தேதி தனது வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
சாந்தியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி உத்தரவிட்டார். கொலையாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது சாந்தி வீட்டுக்கு புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜா(25) என்பவர் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது.
அவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பதை அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அதன் பேரில் பல்லடத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ராஜாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சாந்தியை கொலை செய்ததை ராஜா ஒப்புக்கொண்டார். போலீசில் ராஜா அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. உடனே நான் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். மறு முனையில் பேசிய பெண் தனது பெயர் சாந்தி என்றும், தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் கூறினாள்.
அவளது பேச்சில் மயங்கிய நான் சாந்தியை அவளது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தேன். உள்ளம் கவர்ந்த அவள் வீட்டிலேயே தங்கி விட்டேன். கணவன்–மனைவி போல சந்தோஷமாக வாழ்ந்தோம். இந்த நிலையில் சாந்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதை அறிந்தேன். நீ எனக்கு மட்டும் தான். மற்றொருவருடன் தொடர்பு வைத்திருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். ஆனால் சாந்தி அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த நான் வீட்டில் இருந்த தோசைக்கல்லை எடுத்து அவளது தலையில் தாக்கினேன். அதில் சாந்தி பரிதாபமாக இறந்தாள். போலீசார் எப்படியும் கைது செய்து விடுவார்கள் என பயந்து அங்கிருந்து தப்பி பல்லடத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தேன். போலீசார் எப்படியோ தகவல் அறிந்து என்னை கைது செய்து விட்டனர்.
மேற்கண்டவாறு ராஜா தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
Average Rating