ஐ.சி.எப்–ல் ரெயில்வே அதிகாரி அலுவலகத்தில் பயிற்சி மாணவர் தீக்குளிப்பு…!!
சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழில்சாலையில் அப்ரன்டிஸ் பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் பயிற்சி முடிந்ததும் மீண்டும் ரெயில்வே பணியில் சேர்வது வழக்கம்.
இந்த நிலையில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கும் ரெயில்வேயில் உடனடியாக பணி வழங்க வேண்டுமென 100–க்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்து கடந்த 2 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.சி.எப். மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு பயிற்சி முடித்த மாணவர்கள் ஒழுங்கிணைப்பாளர் ஜீவா தலைமையில் குழுக்களாக பிரிந்து 70 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று காலை சென்னை திரு.வி.கா. நகரை சேர்ந்த ஹேமந்த்குமார் (36) உள்பட 20–க்கும் மேற்பட்ட பயிற்சி முடித்த மாணவர்கள் பொது மேலாளர் அலுவலகம் அருகே இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென ஹேமந்த்குமார் கையில் பெட்ரோல் கேனுடன் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரை தாண்டி சுவர் ஏறி குதித்து பொது மேலாளர் அறை நோக்கி ஓடினர்.
அலுவலகம் முன்பு ஹேமந்த்குமார் நின்றபடி வேலை வழங்க வேண்டுமென கூச்சலிட்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஹேமந்த்குமாரை மீட்க முயன்றனர். ஆனால் அவர் அவர்களிடம் சிக்காமல் எரியும் தீயுடன் வெளியே ஓடி வந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடல் வெந்த ஹேமந்த்குமார் சாலையோரத்தில் எரியும் தீயுடன் அமர்ந்தார். அவரை ரெயில்வே ஊழியர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்தது காலை நேரம் என்பதால் ஏராளமான ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் எரியும் தீயுடன் வாலிபர் ஓடியதை கண்டதும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.
Average Rating