ஆம்பூர் அருகே கர்ப்பிணி பெண் மர்ம சாவு: கிணற்றில் பிணமாக மிதந்தார்..!!
ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மேல் கன்றாம்பல்லியை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அனுஷா (25) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு ஆறுமுகமும், அனுஷாவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அனுஷா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா தாய் வீட்டிற்கு சென்றார். நேற்றிரவு அவர், வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். இன்று காலையில் பெற்றோர் எழுந்தபோது அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த மகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை. பின்னர் சந்தேகப்பட்டு கிணற்றை எட்டி பார்த்தபோது அனுஷா மர்மமான முறையில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அனுஷா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுஷாவுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆவதால், திருப்பத்தூர் உதவி கலெக்டர் சந்தரகலா விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Average Rating