EPDP செயலாளர் நாயகம் டக்ளஸ் அவர்களை இலக்கு வைத்து புலிகள் தற்கொலைத்தாக்குதல். செயலாளர் நாயகத்திற்கு ஆபத்தில்லை. ஈ.பி.டி.பி யின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஸ்டீவன் புலிப்பாசிசத்திற்கு பலி!
இன்று காலை EPDP செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது இலக்கு வைத்து புலிகளால் ஏவிவிடப்பட்ட பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் அமைச்சு அலுவலகத்தின் பொதுசன தொடர்பு அலுவலகத்தில் வெடித்து சிதறியுள்ளார். EPDP செயலாளர் நாயகத்தை நோக்கி செல்லும் அமைச்சு பணிமனை வாசலில் அமைச்சரின் பொதுஐன தொடர்பு அதிகாரியாக பணியில் ஈடுபட்டிருந்த ஈ.பி.டி.பி யின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஸ்டீவன் அவர்கள் புலிப்பாசித்தின் கொலை வெறிக்கு பலியாகியுள்ளார். இன்று காலை வழமை போல் மக்களைச் சந்தித்து மக்கள் குறை தீர்க்கும் பணியில் EPDP செயலாளர் நாயகம் அவர்கள் தனது அமைச்சு அலுவலகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்காக அங்கு பொதுமக்கள் பலரும் காத்து நின்றனர். இத்தருணத்தில் பாசிசப்புலிகளால் ஏவிவிடப்பட்டிருந்த குறித்த தற்கொலை குண்டுதாரியான நடுத்தர வயதுப்பெண் ஒருவர் காலை 8.05 மணியளவில் அமைச்சு பணிமனையின் வாசலில் இருந்த EPDP தோழர் ஸ்டீவன் அவர்களிடம் தான் அமைச்சரை சந்திக்க வேண்டும் என கோரியிருந்தார். குறித்த தற்கொலை குண்டுதாரியாக வந்தவர் உதவி கோரி வந்தவர்போல் காணப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர். EPDP செயலாளர் நாயகம் அவர்களது பாதுகாப்பு குறித்து விழிப்படைந்த ஸ்டீவன் அவர்களும், செயலாளர் நாயகம் அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களும் குறித்த பெண் மீது சந்தேகம் கொண்டு, அவரை சோதனையிடுவதற்கு பெண் போலிஸாரை அழைத்திருந்த போது தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்க வைத்து சிதறியுள்ளார்.
இச்சம்பவத்தின் போது டக்ளஸ் தேவானந்தா அவர்களை நெருங்க விடாது தடுத்திருந்து ஈ.பி.டி.பி யின் கொழும்பு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சின் பொதுஐன தொடர்பு அதிகாரியுமாகிய EPDPதோழர் ஸ்டீவன் அவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மரணமாகியுள்ளார்.
செயலாளர் நாயகம் அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரும், ஈ.டி.பி.பி யின் மூத்த உறுப்பினருமான தோழர் நியாஸ் சித்திரன் அவர்கள் தோழரின் உயிர்காத்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எது வித ஆபத்துக்களும் இன்றி உறுதியுடன் இருக்கின்றார் என்பதையும், பாசிசப்புலிகளின் கொலை வெறிக்கு எமது தோழர் ஸ்டீவன் அவர்கள் பலியாக்கப்பட்டு விடுதலை வித்தாகியுள்ளார் என்ற துயரச்செய்தியையும் எமது மக்களுக்கும் அனைத்துலக தோழர்களுக்கும் உறவுகளுக்கும் ஈ.பி.டி.பி யின் தலைமைப்பணிமனை அறிவித்துள்ளது.