தண்ணீர் தொட்டி உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்கள்…!!
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் போராட்டத்திற்கு செவி சாய்த்த மத்திய அரசு சில சலுகைகளை செய்தது. ஆனால், தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன் தரன் என்ற பகுதியைச் சேர்ந்த ஹர்பால் சிங், பர்கத் சிங், குர்தியால் சிங் மற்றும் கர்தார் சிங் ஆகியோர் இன்று தங்களது வீடு அருகே இருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி உச்சிக்கு சென்றனர்.
அங்கிருந்த அவர்கள் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிடில் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் சமூகம் என்ற அமைப்பு உருவாக்கி இதற்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிர் பகதூர் சிங், ‘‘எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை அவர்கள் போராட்டம் தொடரும்’’ என்று கூறினார்.
Average Rating