டுவிட்டர் உதவியால் ஓடும் ரெயிலில் பசியால் துடித்த சிறுவனுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த மத்திய மந்திரி…!!
புதுடெல்லி அதிவேக விரைவு ரெயில் கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் குசும் யாதவ் என்ற பெண்மணி தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரெயில்வே நிலையத்தில் ஏறினார்.
வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரெயில்கள் நீண்ட நேரம் காலதாமதமாக சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் இவர்கள் சென்ற ரெயிலும் பனியால் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு தாமதமாக சென்று கொண்டிருந்தது. வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் ஆகியதால் அவிஸ் பசியில் துடித்தான்.
இதனால் என்ன செய்வது தெரியாத குசும் யாதவ் தனது கணவரான சத்யேந்த்ரா யாதவுக்கு போன் செய்து தகவலை கூறினார். சத்யேந்த்ரா டெல்லியில் இருந்ததால் தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தார்.
அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. சமூக இணையத்தளமாக டுவிட்டரை ஆன் செய்து மத்திய ரெயில்வே துறை மந்திரியான சுரேஷ் பிரபுவின் அக்கவுண்ட்டை கண்டுபிடித்தார். அதில் தனது மகன் பசியால் துடித்துக்கொண்டிருக்கிறான். தாங்கள் உடனே உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மெசெஜ் வந்து சேர்ந்ததும் சுரேஷ் பிரபு துரித நடவடிக்கை மேற்கொண்டார். அவர் ரெயில்வே துறையை முற்கொண்டு அந்த ரெயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து அந்த சிறுவனுக்கு உடனே பால் மற்றும் பிஸ்கட் வழங்கி உதவிட உத்தரவிட்டார்.
உடனே அலகாபாத் டிவிஷனல் ரெயில் மானேஜர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதன்படி அந்த ரெயில் படேஹ்பூர் ரெயில் நிலையம் வந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் இருவருக்கும் உணவு வழங்கினார்.
மேலும், அந்த ரெயில் கான்பூரை வந்தடைந்தபோது ரெயில்வே அதிகாரிகள் காத்திருந்து பால் மற்றும் பிஸ்கட் வழங்கினார்கள். பசியாக இருந்த தனது மகனுக்கு உடனடியாக உணவு வழங்கிய அதிகாரிகளுக்கு அவிஸின் அம்மா குசும் நன்றி கூறினார்.
Average Rating