மராட்டியத்தில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து: குழந்தை பலி – 2 பேர் காயம்..!!
மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள பிவாண்டி நகரில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு, நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. அதற்கு சில மருத்துவ வசதிகள் தேவைப்பட்டதால், தானேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் மும்பையில் உள்ள நவீன மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியதால், அங்கிருந்த ஒரு ஆம்புலன்சில் குழந்தையை ஏற்றினர். குழந்தையுடன் ஒரு டாக்டரும், நர்ஸ் ஒருவரும் ஏறினர்.
அப்போது ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து தீப்பொறி கிளம்பியதை டாக்டரும், நர்சும் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் குழந்தையை விட்டு, விட்டு கீழே குதித்தனர். அதற்குள் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது. இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இந்த தீ, அருகில் நின்றிருந்த மற்றொரு ஆம்புலன்சிலும் பரவியது. உடனே தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அப்போது ஆம்புலன்சில் இருந்த குழந்தை உடல் கருகி பலியானது தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் வெளியில் நின்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பினர். தீக்காயம் அடைந்த டாக்டருக்கும், நர்சுக்கும் தானேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Average Rating