கோட்டூர்புரத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 100 பேர் துப்புரவு பணி…!!
சென்னையை புரட்டி போட்ட மழை வெள்ளம் பெருமளவு வடிந்து விட்டது.
ஆனால் சேறும், சகதியும், குப்பைகளும் தெருக்களில் தேங்கி கிடக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டது. எங்கும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனை தடுக்க ஏராளமான மருத்துவ குழுக்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள். தெருக்களில் கிருமி நாசினிகளும், பிளிச்சிங் பவுடர்களும் போடப்படுகின்றன. இப்போது தெருக்களில் நடக்க முடியாத சூழ்நிலையும், வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை தான் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
உண்ண உணவு, உடுக்க உடை உள்ளிட்ட நிவாரண உதவிகள் ஏராளமாக குவிந்து விட்டன. ஆனால் தூய்மைப் பணிகள் தான் மந்தமாக நடைபெறுகிறது. வெறும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே இந்த பணிகளை முடிப்பதற்கு பல நாட்கள் ஆகலாம். தேர்தல் நேரங்களில் தெரு தெருவாக அனைத்துக்கட்சி தொண்டர்களும் வந்து முகாமிட்டு தீவிரப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். அதேபோல இந்த இக்கட்டான நேரத்திலும் எல்லா கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் திரண்டு வந்து தூய்மைப்பணியில் இறங்கினால் ஒரு சில நாட்களிலேயே சென்னை மீண்டும் சிங்கார சென்னையாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் துர்நாற்றம் வீசும் சாக்கடைகளில் இறங்கி பணிபுரிவதற்கு கட்சி தொண்டர்கள் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் எழுந்துள்ளது.
வெள்ளையும், சொள்ளையுமாக அலைவதற்குதான் அவர்கள் சரியானவர்கள் என்று குமுறுகிறார்கள்.
பொதுநல அமைப்புகள், தன்னார்வ தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், முஸ்லிம் இயக்கங்கள் களத்தில் இறங்கி, எந்தவித அறிவிப்பும் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். பொதுமக்களின் இந்த ஆதகங்கள் நேற்றைய மாலை மலரிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் தூய்மைப் பணியில் இன்று ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு மகள் தீபா வெங்கட் அடையாறில் வசித்து வருகிறார். அவரும் நெல்லூர் பாரதிய ஜனதா மேயர் அஜீத் இணைந்து பாரதிய ஜனதா தொண்டர்கள் 100 பேரை ஆந்திராவில் இருந்து வரவழைத்து உள்ளனர்.
அவர்கள் துடைப்பம், சாந்து சட்டி, முள் கரண்டி உள்ளிட்ட உபகரணங்களுடன் நேற்று இரவே சென்னை வந்து இறங்கினர். இன்று காலையில் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து சென்னையில் சில நாட்கள் தங்கி இருந்து தூய்மைப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் சில கட்சிகள் இந்த மாதிரி நூற்றுக்கணக்கான தொண்டர்களை இறக்கி வேலை செய்தால் சென்னை பழைய நிலையை எட்டும் நாள் வெகுதூரம் இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்…
Average Rating