ஆற்காட்டில் கணவரை பிரிந்த இளம்பெண்ணை கொல்ல முயற்சி செய்த மேஸ்திரி…!!
ஆற்காடு கிருஷ்ணாபுரம் கூட்ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முனியம்மாள் (16). திருமண வயதை எட்டாத இவருக்கும், ஆற்காடு சின்னப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (45) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு கணவரது வீட்டில் முனியம்மாள் வசித்து வந்தார். தன்னை விட வயதில் மூன்று மடங்கு மூத்தவரான கணவன் ஆனந்தனுடன் வாழ முனியம்மாளுக்கு விருப்பமில்லை. ஆனால் பெற்றோரின் கட்டாயத்தால் ஆனந்தனை, முனியம்மாள் திருமணம் செய்ய நேரிட்டது. திருமணமான சில நாட்களில் ஆனந்தன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது முனியம்மாளுக்கு தெரியவந்தது. இது அந்த இளம்பெண்ணின் இல்லற வாழ்க்கையை விரத்தியடை செய்தது.
இதையடுத்து கணவருடன் வாழக்கூடாது என முடிவு செய்து முனியம்மாள் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேகரின் மகன் வினோத் (25) என்பவர் முனியம்மாளை அடைய எண்ணினார். வினோத் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். அதற்காக கடைத்தெரு உள்ளிட்ட இடங்களில் முனியம்மாள் தனியாக நடந்து செல்லும் போதெல்லாம் அவரை வழி மறித்து வினோத் சில்மிஷம் செய்துள்ளார்.
மேலும் ஏற்கனவே திருமணமான பெண் என தெரிந்தும், முனியம்மாளிடம் தன்னை காதலிக்குமாறும் கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
வினோத்தின் நடவடிக்கை சரியில்லாததால் முனியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த வினோத் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி நேற்று கடை வீதிக்கு நடந்து சென்ற முனியம்மாளை வழி மறித்தார். மீண்டும் அவரிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். முனியம்மாள் காதலை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் மறைத்து வைத்திருந்த கத்தியால், முனியம்மாளின் தலையில் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த முனியம்மாள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating