சிவகாசி அருகே மழை தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி…!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மாரிக்கண்ணன் (வயது 9). தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் திடீரென்று அவனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் மாரிக்கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருத்தங்கல் போலீசில் அவனது தந்தை மாரிச்சாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் அருகில் உள்ள ஸ்டாண்டர்டு காலனி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் நடந்து வந்தன. மழை காரணமாக வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு பள்ளமான இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கிக் கிடந்தது. அந்த தண்ணீரில் சிறுவனின் உடல் மிதப்பதாக திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று பள்ளத்தில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர். அவன் யார்? என்பது பற்றி விசாரித்ததில் காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட சிறுவன் மாரிக்கண்ணன் என்பது தெரியவந்தது. அவனது தந்தை மாரிச்சாமிக்கு தகவல் தெரிவித்து உறுதிபடுத்திய பின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாரிக்கண்ணனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் விளையாடி மகிழ்ந்த போது எப்படியோ அதில் சிக்கி மாணவன் மாரிக்கண்ணன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்து போனது விசாரணையில் தெரியவந்தது.
Average Rating