நீர்கொழும்பு வைத்தியசாலை படுகொலை வைத்தியர் அடையாளம் காணப்பட்டார்
Read Time:1 Minute, 26 Second
நீர்கொழும்பு வைத்தியசாலை மேல் மாடியிலிருந்து இளம் யுவதியைத் தள்ளிப் படுகொலை செய்தாரென குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காணப்பட்டார். நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பிலேயே குற்றம் சாட்டப்பட்ட மேற்படி வைத்தியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக நீதிவான் மகிந்த ரணசிங்க முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் வைத்தியத் தாதி ஒருவரினால் வைத்தியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேக நபரான வைத்தியரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது. அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.