கிறிஸ்துமசுக்கு புது துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை..!!
பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், (வயது 48), கூலித்தொழிலாளி.
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 2–வது மகள் பெனிட்டா (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், வீட்டில் பெற்றோரிடம் தனக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புது துணி வாங்கி தர வேண்டுமென்று கேட்டார். அதற்கு பெற்றோர் இம்முறை சகோதரி திருமணத்தால் வீட்டில் செலவு அதிகமாக ஆகி விட்டதாகவும், எனவே பிறகு புது துணி எடுத்துத் தருவதாகவும் கூறினர்.
இதனால் பெனிட்டா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர், திடீரென தனது அறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டார். சிறிது நேரத்தில் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு பெனிட்டா மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி ஒருவர் சாதாரண பிரச்சினைக்காக தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating