திருவட்டார் அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று போதகர் மனைவி தற்கொலை: மேலும் ஒரு மகள் கவலைக்கிடம்..!!
திருவட்டார் அருகே சுவாமியார்மடத்தை அடுத்துள்ள நெடியங்காட்டைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 40). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் உதவி போதகராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெனிஷா (30). இவர்களுக்கு செலின் சத்யா (7), சுஜித் (4) என 2 மகள்கள் இருந்தனர்.
நேற்று வழக்கம்போல் போதகர் ஜஸ்டின் ஆலய பணிக்கு சென்றார். ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடப்பதால் இரவு வீட்டுக்கு தாமதமாக வந்தார்.
அப்போது வீட்டில் மனைவி ஜெனிஷா, மகள்கள் செலின் சத்யா, சுஜித் ஆகியோர் படுக்கையறையில் வாயில் இருந்து நுரை தள்ளியபடி கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த ஜஸ்டின் அருகில் ஓடிச் சென்று பார்த்தார். அவர்களில் ஜெனிஷாவும், சுஜித்தும் ஏற்கனவே இறந்து இருந்தனர். செலின் சத்யா மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
அவர்களை பார்த்து ஜஸ்டின் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த செலின் சத்யாவை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து ஜெனிஷா தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. ஜெனிஷா வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் அடிக்கடி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஜஸ்டினும், அவரது குடும்பத்தினரும் ஜெனிஷாவை சமாதானப்படுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையே ஜஸ்டின் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார். அதில் அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது. இதனாலும் ஜெனிஷா வேதனை அடைந்துள்ளார். இதில் மனம் உடைந்து தான் ஜெனிஷா தற்கொலை என்னும் துயர முடிவை தேடிக்கொண்டது தெரியவந்தது.
ஜெனிஷா மற்றும் சுஜித் ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பலியான சுஜித் எல்.கே.ஜி. படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செலின் சத்யா 2–ம் வகுப்பு படித்து வருகிறார்.
Average Rating