பாகிஸ்தானில் 8 கொலை குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்…!!
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெஷாவரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவப் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி குழந்தைகளை படுகொலை செய்தபிறகு மரண தண்டனை மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மரண தண்டனை கைதிகள் பலர் வரிசையாக தூக்கிலிடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொலை குற்றவாளிகள் எட்டு பேருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முல்தான், பாவல்பூர் மற்றும் குஜராத் சிறைகளில் தலா இரண்டு கைதிகளுக்கும், டேரா காசி கான் மற்றும் அட்டாக் சிறைகளில் தலா ஒரு கைதிகளுக்கும் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தும்படி ஐ.நா, சர்வதேச பொது மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பல்வேறு உள்ளூர் சமூக அமைப்புகள் வலியுறுத்தியபோதும், பாகிஸ்தான் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 310 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
Average Rating