பிலிப்பைன்ஸை தாக்கிய புயலால் 7,50,000 பேர் வெளியேற்றம்…!!
பிலிப்பைன்ஸில் மெலர் என்ற சூறாவளி தாக்கியதையடுத்து சுமார் 7,50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸின் வடக்கு முனையான சமர் என்ற தீவில் நேற்று அதிகாலை மெலார் புயல் தாக்கியது. மணிக்கு 185 கிலோமீற்றர் வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இங்குள்ள 1,50,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சுமார் 40 உள்ளூர் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 73 கப்பல்களும் நூற்றுக்கணக்கான மீன் பிடிப் படகுகளும் துறைமுகத்திலேயே தங்கியிருக்கும்படி உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பாடசாலை மற்றும் சில அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மெலர் என்ற இந்தப் புயல் கரையைத் தாக்கும் போது 13 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
மேலும், அதிக மழை காரணமாக சுமார் சில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
லூஸன் தீவுக்கு தென்கிழக்குப் பகுதியில் உள்ள அல்பே மாகாணத்தில் மட்டும் சுமார் 6,00,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக அருகிலுள்ள மேயோன் எரிமலைக்கு தாழ்வான பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அல்பே மாகாணத்தில் 12 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடருக்கு தயார்படுத்திக் கொள்வதில் அல்பே மாகாண நிர்வாகம் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.
கடந்த ஆண்டு ஹகுபிட் என்ற மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்ட போது, ஒருவர் கூட இங்கு பலியாகாமல் காப்பாற்றப்பட்டனர், காரணம் முன்கூட்டியே மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அல்பே மாகாணத்துக்கு தெற்கில் உள்ள சர்சோகன் பகுதியிலிருந்து சுமார் 1,30,000 பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
2013இல் பிலிப்பைன்ஸை ஹையான் என்ற புயல் தாக்கிய போது சுமார் 7,350 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Average Rating