ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் பறிமுதல்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுச்சண்டை நடந்து வருகிறது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டில் உள்நாட்டுச்சண்டை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக போலீசார் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு மினி லாரியில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட்டது. இந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு ஏராளமான வெடிகுண்டுகள் கடத்தப்பட இருப்பதாக நகர இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்_இன்ஸ்பெக்டர் சேசு, தனிப்பிரிவு சப்_இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் ராமேஸ்வரம் செம்மடம் அருகே நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மர்ம நபர்கள் சிலர், நடந்து சென்றுகொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒரு இடத்தில் வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூடைகளை போலீசார் தேடி கண்டுபிடித்தனர்.அந்த மூடைகளில் 3,300 ஜெலட்டின் குச்சி வெடிகுண்டுகள் இருந்தன.
இவற்றை வெடிக்கச்செய்ய 300 மீட்டர் டெட்டனேட்டர் வயர்களும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கரையூர்_முத்துராமலிங்க தேவர் நகரை சேர்ந்த ஆனந்தம்மாள், காளியம்மாள், ராமேஸ்வரம் வேர்கோடு, கருணாநிதி, காந்தகுமார், டென்னிஸ், சந்திரன் மற்றொரு சந்திரன் ஆகிய 8 பேரை கைதுசெய்தனர்.
இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக தெரியவருகிறது. நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள்தான், ராமேஸ்வரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டதிலேயே வெடிகுண்டுகளில் அதிகளவு என்பது குறிப்பிடத்தக்கது.