சென்னை பஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி கடலாடியில் மீட்பு…!!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கட்டவரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). பூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது தந்தை முனுசாமி விபத்தில் சிக்கி காலில் காயம் அடைந்தார். இதற்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தந்தையை பார்ப்பதற்காக ரமேஷ் அங்கு சென்றார்.
பின்னர் சொந்த ஊருக்கு வருவதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு ரமேஷ் சென்றார். இரவு நேரத்தில் அவர் அங்கு நின்றபோது 3 வயது சிறுமி ஒருவர் அங்கு நின்றார். அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு ரமேஷ் கடலாடிக்கு வந்துவிட்டார்.
இதற்கிடையே அந்த சிறுமியை காணவில்லை. பஸ்நிலையத்தில் இருந்து மாயமாகிவிட்டார் என தனியார் தொலைக்காட்சியில் செய்து வெளியானது. அந்த செய்தியை கடலாடியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பார்த்தனர்.
மாயமானதாக குழந்தையின் படமும் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அதை பார்த்த பொதுமக்கள் அந்த குழந்தை கடலாடியில் ரமேசுடன் இருப்பதை அறிந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இது தொடர்பாக கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் ரமேசின் வீட்டுக்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியையும் ரமேசையும் கடலாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பஸ் நிலையத்தில் சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. எனவே தான் அழைத்து வந்ததாக போலீசாரிடம் ரமேஷ் கூறினார். இது உண்மையா? அல்லது சிறுமியை ரமேஷ் கடத்தி வந்தாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தற்போது சிறுமி போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளார். சிறுமி மீட்கப்பட்டது தொடர்பாக சென்னை அயனாவரத்தில் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் போளூருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
Average Rating