போனில் தொல்லை தரும் விளம்பர அழைப்புக்கு இனி ரூ.1000 அபராதம்
அழைக்காதீர் பட்டியலில் தொலைபேசி எண்ணை பதிவு செய்த பிறகும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து போன் செய்தால் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இனி ஒரு அழைப்புக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இப்போது ஒரு அழைப்புக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. மிக விரைவில் இது இரு மடங்கு உயர்த்தப்படுகிறது. அது அமலுக்கு வந்துவிட்டால், தொல்லை தரும் ஒவ்வொரு அழைப்புக்கும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும். கிரடிட் கார்டு வேண்டுமா, லோன் வேண்டுமா, இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள் என ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதுவும் மிக முக்கியமான வேலையில் இருக்கும் போது, இம்மாதிரியான அழைப்புகள் வந்தால்… அவ்வளவுதான். இதை தடுக்கத்தான் `அழைக்காதீர்‘ சேவை அறிமுகம் செய்துள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம். இதன்படி, எந்த செல்போன் நிறுவனத்தின் இணைப்பை பெற்றிருக்கிறார்களோ அதன் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை அழைக்காதீர் பட்டியலில் சேர்க்குமாறு மக்கள் கூற வேண்டும். அதில் இருந்து 45 நாட்கள் கழித்து, எந்தவொரு விளம்பர அழைப்பும் வராது. அப்படி பதிவு செய்தவர்களை எந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனமாவது போன் செய்தோ, எஸ்எம்எஸ் அனுப்பியோ தொல்லை செய்தால், அந்நிறுவனத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ரூ.1000 ஆக உயர்த்த டிராய் திட்டமிட்டு உள்ளது.
அழைக்காதீர் பட்டியலில் பதிவு செய்த பிறகும் தொல்லை தொடர்வதாக பலர் புகார் கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கிறது டிராய். மறுபக்கம், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீதும் டிராய் பார்வை திரும்பியுள்ளது. நாட்டில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் டிராய் அமைப்பிடம் 10,700 நிறுவனங்கள்தான் பதிவு செய்துள்ளன.
அழைக்காதீர் பட்டியலில் பதிவு செய்துள்ளோரை தொல்லை செய்பவர்கள், இப்படி பதிவு செய்யாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள்தான் எனக் கூறப்படுகிறது. புதிய விதிகளின்படி, பதிவு செய்யாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் தொல்லை செய்தாலும் கூட அபராதம் விதிக்கப்படும். ஏற்கெனவே உள்ள திட்டத்தில், பதிவு செய்யாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு அபராதம் உண்டா என்பது தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இத்திட்டத்தை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவது குறித்து செல்போன் நிறுவனங்களுடன் டிராய் அமைப்பு கடந்த வாரத்தில் ஆலோசனை நடத்தியது.