விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட்: 6 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன..!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-29 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-29 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) முடிவு செய்தது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த திங்கள் அன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
கவுன்ட்டவுன் முடிந்து பி.எஸ்.எல்.வி சி-29 ராக்கெட், திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணியளவில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட 6 செயற்கைக்கோள்களும் 550 கி.மீ. தொலைவில் புவியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இந்த தகவலை, இஸ்ரோ தன் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் உடனடியாக வெளியிட்டது.
அணுப்பப்பட்ட 6 செயற்கைக்கோள்களில் ‘டெலியோஸ்-1’ என்பதுதான் முதன்மை செயற்கைக்கோள். 400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தொலை உணர்வு பயன்பாட்டுக்கானது. மற்ற 5 செயற்கைக்கோள்களில் 2 சிறியவை (மைக்ரோ சாட்டிலைட்), 3 மிகச்சிறியவை (நானோ சாட்டிலைட்) ஆகும். இதில் டெலியோசுக்கு அடுத்து, மற்ற 5 சிறிய செயற்கைகோள்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு 100 நிமிடங்களுக்கும் சிங்கப்பூரை இந்த செயற்கைகோள்கள் படம் எடுக்கும். அதன்படி, கடல், வான்வழி அச்சுறுத்தல்கள் மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்டவைகள் கண்காணிக்கப்படும்.
பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம், இதுவரை 20 நாடுகளைச் சேர்ந்த 51 வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை, இஸ்ரோ, தனது வணிக நட்பு நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட்டுடன் இணைந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating