மலேசியா: இந்திய தலைவர் கைது
மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பேரணியை ஏற்பாடு செய்த இந்திய தலைவரை மலேசிய போலீசார் நேற்று காலை கைது செய்துள்ளனர். இந்து உரிமை நடவடிக்கைக் குழு என்ற அமைப்பை சேர்ந்த வி.கணபதி ராவ் என்பவர் நேற்று காலை அவரது அலுவலகத்திலிருந்து கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹின்ட்ராப் என்ற இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களான பி.உதயகுமார், வேதா மூர்த்தி மற்றும் கணபதி ராவ் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியை ஏற்பாடு செய்த முக்கிய பிரமுகர்கள் ஆவார். இவர்கள் மூவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்தாக 88 இந்தியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.