தாம்பரம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மகள் கடத்தல்: மர்ம நபர்கள் அடைத்து வைத்திருப்பதாக போனில் கதறல்..!!
தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூரில் வசித்து வருபவர் ராமலிங்கம். தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கலையரசி (வயது22). பி.பாம் முடித்துள்ள இவர் சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வேலைக்கு சென்ற கலையரசி திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த தந்தை ராமலிங்கம் விசாரித்தபோது மாலையில் கலையரசி பணி முடிந்து கடையில் இருந்து வீட்டுக்கு சென்றதும், அதன் பின் அவர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ராமலிங்கம் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமலிங்கத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய கலையரசி, ‘‘என்னை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக கடத்தி வந்து விட்டனர். மதுராந்தகம் அருகே உள்ளேன்’’ என்று கூறும் போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மீண்டும் அதே நம்பருக்கு ராமலிங்கம் தொடர்பு கொண்டபோது அந்த செல்போன் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு விட்டது.
எனவே சப்–இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்தால் பாதிக்கப்பட்ட மர்ம நபர்கள் யாரேனும் இந்த கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலையரசியுடன் நெருங்கி பழகியவர்கள் யார்–யார் என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர்.
சப்–இன்ஸ்பெக்டர் மகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating