மதனப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை..!!
மதனப்பள்ளி மண்டலம் நீருகுட்டவாரிப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). நெசவுத் தொழிலாளி.
அதேபோல் கலிகிரியை சேர்ந்தவர் கவிதா (22). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரெட்டியம்மா என்ற 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கவிதா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.
அங்கு மனவேதனையில் இருந்த அவர், திடீரென உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததால், அவரின் நினைவில் வாடிய சந்திரசேகர், வேலைக்கு செல்லாமலும், சரியாக உணவு சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் இருந்து வந்தார். சம்பவத்தன்று சந்திரசேகர், மாமியாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
தனது மகளை உங்களின் மகளாக நினைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி செல்போனை துண்டித்து விட்டார்.
அதைத்தொடர்ந்து சந்திரசேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை தூக்கில் தொங்கியதை பார்த்த ரெட்டியம்மா, அழுது கொண்டே இருந்தாள். அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சந்திரசேகர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி கிராம மக்கள் மதனப்பள்ளி–2 டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating