சித்தூர் மேயர் கொலை வழக்கு: போலீஸ் விசாரணைக்கு பயந்து கவுன்சிலர் தற்கொலை…!!
சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா, அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோர் கடந்த மாதம் 17–ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கட்டாரி மோகனின் மருமகன் சிண்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் சிலர் போலீசில் சரண் அடைந்தனர். சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மாநகராட்சியின் 38–வது வார்டு கவுன்சிலர் புலிசெர்லா சிவபிரசாத்ரெட்டி (வயது 42) என்பவரை சித்தூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் மாலை விசாரணைக்காக அழைத்து சென்றனர். நள்ளிரவில் வீடு திரும்பினார். அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
கவுன்சிலர் சிவபிரசாத் ரெட்டி திருமணம் ஆகாதவர். கடந்த 2013–ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் ஆதரவாளர். கடந்த 2007–ம் ஆண்டு கட்டாரி மோகன் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக கைதாகி விடுதலையானவர்.
எனவே கட்டாரி மோகன், அவரது மனைவி கொலை வழக்கிலும் சிவபிரசாத் ரெட்டிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீசார் அவரை அழைத்து சென்று விசாரித்து வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையும் சோதனையும் தனக்கு மக்கள் மத்தியில் அவமானத்தை ஏற்படுத்தியதாக சிவபிரசாத் ரெட்டி உணர்ந்தார்.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சிவபிரசாத் ரெட்டியின் தாய் கவுசல்யா பால் வாங்கி வருவதற்காக வெளியே சென்றார். பின்னர் 6.30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாளிடப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த கவுசல்யா கதவை தட்டினார். ஆனால் திறக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் சிவபிரசாத்ரெட்டி தூக்குபோட்டு பிணமாக தொங்கியது தெரியவந்தது.
தகவல் கிடைத்ததும் சித்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சிவபிரசாத் ரெட்டி எழுதிய 2 பக்க கடிதம் சிக்கியது. அதில் அவர் எழுதி இருப்பதாவது:–
நான் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது மேயர் கொலை வழக்கில் என்னை கைது செய்யப் போவதாக கூறி போலீசார் மிரட்டி வருகின்றனர். எனது உடல்நிலை இருக்கும் நிலையில் என்னால் போலீசாரின் அடியை தாங்க முடியாது.
என்னை நம்பி வாக்களித்த மீட்டூர் மக்கள், தாய் கவுசல்யா, சகோதரிகள் வாணி, விஜயா ஆகியோர் என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.
இவ்வாறு அவர் அதில் எழுதி உள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating