வேலூர் எஸ்.பி. ஆபீசில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு…!!
வேலூர் அடுத்த நாகநதி கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 75). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கலா (60). இவர்களுக்கு சித்ரா மற்றும் சிவகாமி என 2 மகள்கள் உள்ளனர்.
சித்ரா திருமணமாகி திருவண்ணாமலை மாவட்டம் வில்வ ஆரணியில் உள்ள கணவரது வீட்டில் வசிக்கிறார். இளையமகள் சிவகாமிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் கடந்த 15–ந் தேதி ஜானகிராமனுக்கு சொந்தமான வீட்டின் அருகே உள்ள 12 அடி நிலத்தில் வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் பூச்சி மருந்து தெளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜானகிராமனின் இளையமகள் சிவகாமி தட்டிக் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த மகேந்திரன் அருகே கிடந்த கட்டையால் சிவகாமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சிவகாமி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜானகிராமன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசீலன் மற்றும் வேலூர் தாலுகா போலீசில் முறையிட்டார். ஆனால் போலீசார் மகேந்திரனுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஜானகிராமன் தனது மனைவி கலாவுடன் இன்று வேலூர் எஸ்.பி.ஆபீசுக்கு வந்தார்.
எஸ்.பி. ஆபீசில் வளாகத்திற்குள் நுழைந்த போது கேனில் மறைத்துக் கொண்டு வந்த மண்எண்ணையை ஜானகிராமனும், மனைவி கலாவும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ஓடிவந்து தம்பதியிடம் போராடி மண்எண்ணை கேனை கைப்பற்றினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜானகிராமன் நடந்ததை கூறினார். இதையடுத்து உயர் அதிகாரிகள் வேலூர் தாலுகா போலீசாரை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.
தம்பதியினரும் தாலுகாக போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் எஸ்.பி.ஆபீசில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating