நேபாளத்தில் தொடரும் வன்முறை: பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை தீவிரம்…!!
நேபாளத்தில் தொடரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாதேசி சமுதாய ஆர்ப்பாட்ட குழுவினரும் ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம்தேதி புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின்படி, நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய நேபாள எல்லை பகுதியில் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சரக்குகளை ஏற்றிவரும் லாரிகளை உள்ளே நுழையவிடாதபடி இந்தியா-நேபாளத்துக்கிடையிலான முக்கிய எல்லைப் பகுதியான பிர்குஞ்ச்-ரக்ஸவ்ல் சாலை அருகே முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விவகாரத்தில் தலையிட்டு போராட்டங்களை கைவிடுமாறு வலியுறுத்தியது.
இந்நிலையில், தொடரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் மற்றும் மாதேசி சமுதாய ஆர்ப்பாட்ட குழுவினரும் ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நேபாள காங்கிரஸ் கட்சியினரும், ஒருங்கிணைந்த மாதேசி ஜனநாயக முன்னணியின் பிரதிநிதிகளும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது தெரை பகுதியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தற்போதையை அரசியல் சிக்கலை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும் இருதரப்பினரும் ஒப்புதல் அளித்தனர்.
இதனால் நீண்ட நாட்களாக நேபாளத்தில் தொடரும் போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Average Rating