மொபைல் குறுஞ்செய்தி அனுப்பி உலக சாதனை படைத்த சிறுவன்
மொபைல் போனில் 160 வார்த்தைகளை 45 வினாடியில் டைப் செய்து எஸ்.எம். எஸ்., மூலம் அனுப்பி சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து சிறுவன். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஈ நிகோலஸ்(17). மொபைல் போன் பயன் படுத்துவதில் கில்லாடி. மிகவும் லாவகமாக கையாளுவார். அதிலும் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் அதிவேகமாக செயல்படுவார். கடுமையான பயிற்சிக்குப்பின், 45 வினாடிகளில் 160 வார்த்தைகளை மொபைல் போனில் டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி, உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவர் கூறுகையில், “தினமும் 20 நிமிடம் மொபைல் போனில் பயிற்சி எடுத்து வந்தேன். பின்னர்தான் சாதனை படைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது’ என்றார். நிகோலசின் தந்தை கூறுகையில், “கிருஸ்துமஸ் பண்டிகையின் போது கின்னஸ் சாதனை புத்தகத்தை என் மகனுக்கு பரிசளித்து வருகிறேன். ஒரு நாள் அவன் உலக சாதனை பட்டியலில் இடம் பிடிப்பான் என்ற நம்பிக்கை இருந்தது’ என்றார்.