சீனாவில் பன்றி கண்விழி வெண்படலம் மனிதனுக்கு பொருத்தி சாதனை…!!
தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஒருவர் உடலில் இருந்து மற்றொருவருக்கு உறுப்புகள் மாற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் விலங்கின் உடல் உறுப்பை மனிதனுக்கு மாற்றி நிபுணர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர்.
இச்சாதனை சீனாவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. கண்பார்வையற்ற 60 வயது முதியவருக்கு பன்றியின் கண்விழிபடலத்தை உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
அவரது பெயர் வாங்ஸினி. இவரால் 10 செ.மீட்டர் தூரத்தில் அசையும் பொருட்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் நாள் செல்ல செல்ல அந்த கண்களின் பார்வையும் பறிபோகும் என டாக்டர்கள் எச்சரித்தனர்.
கண்விழி வெண்படலத்தை யாராவது தானமாக வழங்கினால்தான் அவர் பார்வையை திரும்ப பெற முடியும் என கூறினர். ஆனால், கண்விழி வெண்படலம் தட்டுப்பாடு நிலவியது. எனவே, ‘அகள்னியா’ என அழைக்கப்படும் பயோ என்ஜினீயரிங் கண்விழி வெண்படலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இத்தகைய தொழில் நுட்பம் வாய்ந்த விழி வெண்படல செல்கள் பன்றியிடம் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பன்றியின் விழிவெண்படலம் வாங்ஸினிக்கு பொருத்தப்பட்டது.
இந்த ஆபரேசன் கடந்த செப்டம்பரில் நடந்தது. தற்போது 3 மாதங்களுக்கு பிறகு அவருக்கு படிப்படியாக மீண்டும் கண்பார்வை கிடைத்தது. இதனால் இந்த உறுப்பு மாற்று ஆபரேசன் வெற்றி பெற்றுள்ளதாக சீனாவின் ஷாங்டாங் கண் நிறுவன டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
சீனாவில் விழிவெண்படல நோயினால் ஏராளமானவர்களுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆண்டுக்கு 1 லட்சம் பேரை இந்நோய் தாக்குகிறது.
ஆனால், ஆண்டுக்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே தானம் பெற்று இந்த உடல் உறுப்பு ஆபரேசன் மூலம் பார்வை கிடைக்கிறது. தற்போது பன்றியின் விழிவெண்படலம் பொருத்து வதன் மூலம் ஏராளமானவர்கள் பயன்பெற முடியும் என கண்சிகிச்சை நிபுணர் ஷாய் தெரிவித்துள்ளார்.
Average Rating