விருத்தாசலம் அருகே செல்போன் டவரில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்..!!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் அற்புதராஜ், தொழிலாளி. இவரது மனைவி அந்தோணி மேரி.
அற்புதராஜ் தனது குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவன டவர் அமைக்க ஏற்பாடு செய்தார். அதற்கான பணிகள் நடந்து வந்ததை அறிந்த அவரது சகோதரர்கள் ஆரோக்கியராஜ், அற்புத ராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணிமேரி, இன்று காலை 7 மணி அளவில் அதே பகுதியில் உள்ள 100 அடி உயரமுள்ள மறறொரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்த டவரில் சுமார் 150 அடி உயரத்தில் நின்று கொண்டு, கணவனின் சகோதரர்களுடைய செயலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டார். இதனையறிந்து கிராம பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ஊ.மங்கலம் போலீசார் மற்றும் நெய்வேலி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி காலை 9 மணி அளவில் கீழே இறங்க செய்தனர். பின்னர் அந்தோணிமேரி கோரிக்கை குறித்து கேட்டறிந்து அவரது உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Average Rating