மட்டக்களப்பு ஐயன்கேணிப் பகுதியில் இரு சிங்கள வியாபாரிகள் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேணிப் பகுதியில் வைத்து இரு சிங்கள வியாபாரிகள் இனந் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாணந்துறையைச் சேர்ந்த ரத்னசிறி குணதிலக, துவான் தில்ருக்ஸ் பொன்சேகா ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இவர்கள் இருவரினதும் காதுக்குள்ளேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இதற்கு 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினர். இரு சடலங்களும் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே நீண்டநேரம் கிடந்தன. இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் இதுவரை இனம் காணப்படவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் ரீ சேர்ட்டும் அரைக்காற்சட்டையும் அணிந்திருந்தனர். இவர்கள் கதிரை, மேசை, கண்ணாடி அலுமாரிகளை தயாரித்து மட்டக்களப்பு பிரதேசத்திற்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினமும் இவர்கள் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து தளபாடங்களை எடுத்துக் கொண்டு விற்பனைக்கு சென்ற வேளையிலேயே காலை 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.