தொடர்மாடி வீடுகளை பெற்றுக்கொள்வோர் விற்கவோ வாடகைக்கு விடவோ முனையக் கூடாது
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் தொடர்மாடி வீடுகளைப் பெறுவோர்,ஒரு போதும் அவ் வீட்டை விற்கவோ, அல்லது வாடகைக்கு விட முடியாத முறையில் உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டே குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுமென வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். பொரளை, 797 வத்தையில்,தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியபின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; மஹிந்த சிந்தனையின் கீழ் சேரிப்புற மக்களுக்காக 65,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தினை நகர அபிவிருத்தி அமைச்சும் வீடமைப்பு அமைச்சும் இணைந்து செயற்படுத்தி வருகின்றது. யுத்தமும் அபிவிருத்தியும் ஒன்றாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு மாநகரத்தில் வீடுகளை அமைக்க அரச தனியார் காணிகள் இல்லாமையே பெரும் பிரச்சினையாகவுள்ளது. கொழும்பு மாநகரில் குடியிருப்பாளர்களுள் 100 க்கு 17 வீதமானோர் குடிநீர் இன்றி வாழ்கின்றனர். 100க்கு 14 வீதமானோர் மலசலகூடம் இன்றி வாழ்கின்றனர். 100 க்கு 9 வீதமானோர் கழிவுநீர் அகற்ற முடியாமல் வாழ்கின்றனர். 100 க்கு 9 வீதமானோர் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்கின்றனர். அவர்கள் ஒருபோதும் தொடர்மாடி வீட்டினை அமைக்க வேண்டும். அல்லது பிரபல்யமான பாடசாலையில் தமது பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டுமென்று ஒரு போதும் சிந்திப்பதில்லை.
நான்கு சுவர்கள் கொண்டதும் ஓர் கூரையைக் கொண்ட ஒரு சாதாரண வீட்டினை அமைப்பதற்கே அவர்கள் என்னிடம் விண்ணப்பிப்பார்கள். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா கடனையும் சில தகரங்களையும் பெற்று அவர்களே தமக்கு ஏற்ற முறையில் வீடுகளைக் அமைத்துக் கொள்கின்றார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் முகமட் றபீக், மாநகர சபை உறுப்பினர் எம்,.மன்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.