திருமணம் நடக்க சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்
தனக்கு திருமணம் நடப்பதற்காக ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்க சிறுவனை நரபலி கொடுப்பதற்காக சிறுவனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ரமேஷ்-பாலநாகம்மாள் தம்பதியின் மகன் முகிலன்(4). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எல்கேஜி படித்து வந்தான். கடந்த 25ம் தேதியன்று வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த முகிலனை காணவில்லை. சிறுவனின் பெற்றோர் உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரமேஷின் உறவுக்காரரான ஜோதிடர் சுப்பையாவின் மகன் அய்யப்பன்(23) மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அய்யப்பனிடம் விசாரித்தனர். அப்போது, சிறுவன் முகிலனை ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினான் அய்யப்பன். ஓரின சேர்க்கை வெறியில் இந்த கொலை நடந்ததாக போலீசார் முதலில் தெரிவித்தனர். பின்னர் முகிலனின் தாய் பாலநாகம்மாள் மீது அய்யப்பனுக்கு ஒரு தலைக் காதல் இருந்ததாகவும், இதற்கு இடையூறாக இருந்ததால் முகிலனை அய்யப்பன் கொலை செய்யதுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இப்போது இந்த கொலை விசாரணையில் திடீரென்று மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் ஏற்பட்டு வந்த திருமண தடையை போக்க அய்யப்பன் சிறுவனை நரபலி கொடுத்ததாகத் தெரிய வந்துள்ளது.
தனது ஜாதகத்தில் உள்ள திருமண தோஷத்தை போக்குவதற்காக 3 நரபலிகளை கொடுக்க அய்யப்பன் திட்டம் போட்டுள்ளான். அதில் முதல் கட்டமாக சிறுவன் முகிலனை கொன்று கிணற்றில் தள்ளியுள்ளான்.
அய்யப்பனை போலீஸ் காவலில் எடுத்து மேலும் தீவிரமாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.